மாமன்னர் ராஜராஜன் முடிசூட்டு விழா ஓவியம்
Size : 56 inches X 35 inches
Type : Canvas print with wooden frame
Painting Type : Digital
திருமகள் போல பெருநிலச் செல்வியின் அருளையும் பெற்ற அருமொழி சிறுவயதிலேயே நாட்டை ஆளும் அத்தனை தகுதியையும் பெற்ற வீரமகனாகத் திகழ்ந்தவர். ஆதித்த கரிகாலன் மறைந்த பின் சோழ நாட்டை ஆள, மக்களும், அரச குருமார்களும், அமைச்சர்களும் வேண்டியும் பதவி ஆசை அற்று, அப்பதவியை தனது சிறிய தந்தையாரான உத்தம சோழனிடத்தில் ஒப்படைத்து, அவர் அரசளும் வரை சோழ முடியை மனதாலும் நினையேன் என்று திருவாலங்காட்டுச் செப்பேடு தரும் செய்தி, அவரின் உயரிய பண்பையும், நாட்டுப்பற்றையும் குடிகாக்கும் மாண்பையும் காட்டுகிறது.
உத்தமசோழன் ஆட்சியில் இருந்த பதினைந்து ஆண்டுகளில்… கலை, கல்வி, வீரம் அரசியல், சமூகவாழ்வியல், நிர்வாக மேலாண்மை என பல்துறை அறிவையும் பெற்ற ஓர் ஒப்பற்ற தலைவனாக தன்னைப் புடம்போடு பெருகேற்றிக்கொண்டு ஒரு தவவாழ்வாய் வாழ்ந்த அருமொழி, 985-ல் மக்கள் கொண்டாட சோழ அரியணை ஏறினார்.
அவரின் முடிசூடலை குறிப்பிடும் திருவாலங்காட்டு செப்பேடு, “ஒலிமிகு சிறுபறை, மணி, எக்காளம் போன்றவற்றின் வரிசையாலும் பொற்பறை, முரசு, பேரொளி, சங்கம் முதலியவை திசைகளில் முழங்க அபிஷேக நீரால் பூமியில் கலியால் தோன்றிய அழுக்கை நீக்குபவன் போல அருமொழி வர்மன் முடிசூடினான் அரசர்களுக்கெல்லாம் அரசன் எங்கள் மாமன்னர் இராஜராஜன்!” என்கிறது.
சோழ மண்டலத்தின் மாபெரும் மன்னராக ஆகவேண்டுமெனில் அவருடைய பராக்கிரமத்தையும் செல்வாக்கையும் சொல்லிப் புரிய வேண்டியதில்லை. இவரின் உருவம் குறித்தும் ஆளுமை குறித்தும் பல பாடல்கள் உள்ளன. சோழ வம்சம் பற்றிய ஓலைச்சுவடிகள் இவருடைய ஒளிரும் பொன் நிற அழகு தேகத்தையும் வீரத்தையும் வர்ணிக்கிறது. காந்தளூர் சாலை முதல் கடாரம் முதல் வென்றெடுத்த வீரகோ ராஜராஜன், பரந்த சோழ மண்டலம் முழுக்க கோயில்களையும் மக்கள் வாழ் குடில்களையும் அமைத்து அரசாண்ட மாமன்னன்.
புஜபல பராக்கிரமம் மிக்க அபயகுல சேகரன் எளிமையான ஒரு மக்கள் அரசனாகவே இருந்துள்ளான். அவரது உடற் கட்டமைப்பு, அணிந்திருந்த உடைகள் மற்றும் ஆபரணங்கள் அக்காலத்தில் இருந்த பிறமன்னர்களைப் போன்ற ராஜதோரணையில் இல்லை. தஞ்சை பெரியகோயிலில் வரையப்பட்ட அவர் கால சுவர் ஓவியங்கள் இதனை நமக்கு தெளிவாக எடுத்துக்காட்டுகின்றது.
இவ்வோவியங்களில் காட்டப்பட்ட மாமன்னர் இராஜராஜன் நேர்த்தியான நடுத்தர வயதுக்குரிய உடல்வாகுடன் காட்டப்பட்டுள்ளார். பொலிவான தேகத்தை உடையவர் என்பதால் பொன்னிறத்தில் காட்டியுள்ளார்கள். மாமன்னராக இருந்தபோதிலும் அவரது தலையில் பொன்னால் ஆன பெருங்கிரீடங்கள் ஏதும் இல்லை. தலை முடிகளைச் சேர்த்துப் பின்னிய சடா கிரீடத்துடனோ, பின் உச்சியில் கொண்டைபோட்ட நிலையிலோ தான் காட்டப்பட்டுள்ளார். அதில் சிறிய பொன்னால் ஆனா ஆபரணத்தை சூடியிருப்பதாகவே காட்டப்பட்டுள்ளார். மேலும் எளிமையான வேட்டி கட்டும் மெல்லிய துணியுமே இவரது ஆடையாக ஓவியங்களில் காட்டப்பட்டுள்ளது.
சோழர்கால செப்புச் சிலைகளை ஆராய்ந்தால், அதில் கூம்பாய் அமைந்திருக்கும் சடை முடியில் கோர்க்கப்பட்டிருக்கும் ஆபரணங்களையும் வளையங்களையும் மட்டுமே காணமுடியும். முத்துக்கள், கழுத்தை ஒட்டிய பொன் ஆபரணங்கள், மார்பில் வீரசன்னம், காதணி (குண்டலம்) கை வளையம், அட்டிகை, கால் தண்டை இவைகள் தான் அணிமணிகளாக காணப்படுகின்றன.
தஞ்சை இராஜராஜீச்வரமுடையார் (தஞ்சை பெருவுடையார்) கோயிலின் கருவறை மேல் உள்ள இந்த ஓவியங்களின் அடிப்படையில் இவரின் வளமான அழகு பொருந்திய முக அமைப்பு அவரது அன்பை வெளிக்காட்டும் கன்னங்கள், சிகை அலங்காரம் போன்றவற்றை ஒப்பிட்டு இவ்வோவியமானது வரையப்பட்டுள்ளது.
மாமான்னர் இராஜராஜன் சிறந்த சிவநெறியாளர். தன்னை சிவபாதசேகரன் என்று அறிவித்துக்கொண்டதோடு மட்டுமல்லாது, சிவபெருமானுக்காக தஞ்சை பெரியகோயில் எனும் பேராலயத்தைக் கட்டியெழுப்பியவர். அந்த ஆலயத்தில் வரையப்பட்ட ஓவியங்களில் தன்னை ஆடவல்லனை வழிபடுவது போன்ற ஓவியங்களை வரைந்துள்ளார். அவருக்கு ஆடவல்லான் எனும் நடராசப்பெருமான் மீது இருந்த பற்றையும், பெரும் இறை உணர்வையும் இது காட்டுகிறது. எனவே அவரது இந்த ‘முடிசூட்டுவிழா’ ஓவியத்தின் பின்னணியில் ஆடவல்லானை வைத்து, அப்பெருமானின் ஆசியுடன் மாமன்னர் முடிசூட்டிக்கொள்ளவதாக கற்பனை செய்து, இந்த ஓவியத்தில் அதனைக் காட்டியிருக்கிறோம்.
மேலும், இவ்வோவியத்தில்… இவருக்கு மிக நெருக்கமான உறவுகளான
இராஜ குரு ஈசான சிவ பண்டிதர்
சேனாபதி கிருஷ்ணன் இராமன் மும்முடிச்சோழ பிரம்மமாராயன்
கருவூரார்
மகன் இராஜேந்திர சோழன்
சர்வ சிவ பண்டிதர்
போன்றவர்கள் மாமன்னர் இராஜராஜன் மணிமுடி சூடும் வேளையில் உடனிருந்திருப்பார்கள் என்ற ஊகத்தின் அடைப்படையில், அவர்கள் முன்னிலையில் நடந்திருக்கும் விழாவாக வரையப்பட்டது. சோழர் காலத்தில் சொகுசு அரியணைகள் - ஆசனங்களுக்கான ஆதாரங்கள் கிடைக்கப்பெறவில்லை. சோழர்கால ஓவியங்கள், சிற்பங்கள் இவர்கள் எளிமையான வாழ்வு வாழ்ந்ததையே வெளிப்படுத்துகிறது. அரசர்களுக்கான சிம்மாசனங்கள் எனும் பேராசனங்கள் இவர்கள் காலத்தில் இருந்ததில்லைபோலும் என்றே தோன்றுகிறது. அரண்மனைகளில் அல்லது ஆலயங்களில் அமைக்கப்பட்ட முடிசூட்டு மண்டபங்களில் அலங்கரிக்கப்பட்ட கல்மேடைகளில் அமர்ந்தே முடிசூட்டு நிகழ்வுகள் நடந்திருக்கவேண்டும் என்று ஊகிக்க முடிகிறது. ஆலய அமைப்புகளும் அவ்வாறே அமைந்திருப்பதையும் ஒப்புநோக்கி, அதன் அடிப்படையில் இந்த ஓவியத்தில் மாமன்னர் இராஜராஜனின் முடிசூட்டு விழா நிகழ்வைக் காட்டியுள்ளோம்.
தஞ்சை பெரியகோயில் சுவர் ஓவியங்கள், பல சோழர்கால கோயில்களின் சிற்பங்கள், செப்புத்திருமேனிகள், செப்பேடுகள், ஓலைச்சுவடிகளில் உள்ள பாடல்கள் போன்றவற்றில் இருந்து, ஆய்ந்து திரட்டப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யப்பட்ட ஆத்மார்த்தமான படைப்பு இந்த ஓவியமாகும்.