"சோழதேசம்"எனும் ஒரு வரலாற்று மெய்நிகர் திரைப்படத்தை சென்னையில் திரையிடுவதில் நாங்கள் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம். இந்த ஆவணப்படம் 10-ஆம் நூற்றாண்டு வாக்கில் தமிழகத்தை ஆண்ட சோழர்கள் ஆட்சியை, குறிப்பாக மாமன்னர் இராஜராஜன் ஆட்சி கால வரலாற்றுச் செய்திகளை மையக் கருவாகக் கொண்டிருக்கும். அன்றைய சோழ தேசத்தின் பெருமைகள் பற்றி அறிய தகவல்களைத் தேர்ந்து எடுத்து காட்சிப்படுத்த உள்ளோம்.
இத்திரைப்படமே இந்தியாவின் Virtual Reality (VR) முறையில் தயாரான முதல் வரலாற்றுப் படமாக இருக்கும் என்பதில் பெருமை கொள்கிறோம். உயர்தரமான புதிய தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட 360° மெய்நிகர் ஆவணப் படம் தமிழில்; அதுவும் சோழர்கள் பற்றியது என்பது நம் எல்லோருக்குமே ஒரு பெருமைதானே!
உங்களின் முதல் அனுபவம் ‘சோழ தேசம்’ வழியாகப் பயணிக்கட்டும்! அது உங்களை வியப்பில் ஆழ்த்தும் புதுவிதப் பயணமாக இருக்கும்.
இந்த படத்திற்கென பல ஆய்வுகளை மேற்கொண்டும், பல மூத்த வரலாற்று அறிஞர்கள் மற்றும் ஆய்வாளர்களைச் சந்தித்தும் அரிய தகவல்களை பல வருடங்களாக திரட்டி தயார் செய்து இருக்கிறோம்.
தமிழரின் பெருமைமிகு அடையாளமாக இருக்கும் சோழர்கள், அவர்களின் ஆட்சி காலத்தில் இருந்த வாழ்வியல் முறை, தஞ்சை மாநகர் அமைப்பு, அதன் நடுவே வானளாவ அமைந்த தஞ்சைப் பெருவுடையார் ஆலயம், அதன் பிரம்மாண்ட, அழகிய காடுமானம் ஆகியவற்றை இருந்த இடத்தில் இருந்தே நாம் நேரிற் சென்று பார்த்துவிட்டு வந்த அனுபவத்தைப் பெறலாம். அதுமட்டும் இன்றி பெருவுடையார் கோயிலில் உள்ள சோழர்கால ஓவியங்களை மிகத்துல்லியமாகக் கண்டுகளிக்கலாம்.
நோக்கமும் செயலும்
சமீப காலங்களில் வரலாறு மற்றும் தொல்லியல் அகழாய்வு பற்றிய புத்தகங்களைத் தேடிப் படித்தும், வரலாற்றுப் படங்களை பார்த்தும் குறிப்பாக, சோழர்களைப் பற்றி தெரிந்துகொள்ளும் ஆர்வமும் நம் மக்களிடையே அதிகமாக இருந்து வருகிறது. அப்படியான மனவோட்டத்தில் 1000 வருடத்திற்கு முன் சோழதேசத்தில் நாம் வாழ்ந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்? என்று ஒரு கற்பனைக் கேள்வி வருகிறதல்லவா!
அந்தக் கற்பனையைக் காட்சிப்படுத்தும் விதமாக உங்களை ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னோக்கிப் பயணிக்கவைத்து 10-ஆம் நூற்றாண்டின் சோழ தேசத்தில் உலவ விட்டால் எப்படி இருக்கும்? அப்படிப்பட்ட முயற்சியைத் தான் இந்த படத்தில் நாங்கள் மேற்கொண்டிருக்கிறோம்.
புதுமையான பல அனுபவங்களைத் தர இருக்கும் இந்த ‘சோழ தேசம்’ Virtual Reality (VR) திரைப்பட வரலாற்று ஆய்வுகளில் பெறப்பட்ட செய்திகளை முப்பரிமாணமாக வெளிப்படுத்தும் மற்றும் பொழுதுபோக்கின் வடிவில் தமிழ் வரலாற்று பாடத்தை மக்களுக்கு புகட்ட வேண்டும் என்பதே எங்களின் நோக்கம்! இந்தப் படம் மாணவர்களுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். அவர்களுக்கு வரலாற்றின் மீதான ஆர்வம் மற்றும் தேடலை ஊக்கப்படுத்துவதாக அமைந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.
இந்தச் சிறப்புமிகு ஆவணத் திரைப்படத்தை Virtual Reality உபகரணங்கள் மூலம் திரையரங்குகள், வணிக வளாகங்கள் (Mall) மற்றும் பள்ளி, கல்லூரிகளில் திரையிடத் திட்டமிட்டு உள்ளோம். முதல் முயற்சியில், பெரும் உழைப்பில் உருவான இந்த நவீன வடிவ Virtual Reality திரைப்படத்தின் தயாரிப்பிலும், அதனைத் திரையிடும் பணியிலும் தாங்களும் தங்களின் பங்களிப்பு செய்து எங்களுடன் கரம் கோர்க்க வேண்டும் என விரும்பி கேட்டுக்கொள்கிறோம். அது எங்களின் தொடர்ந்த படைப்புப் பணிகளுக்கும் ஆக்கமும் ஊக்கமும் தருவதாக அமையும்!